தாலாட்டுப் பாடமாட்டேன்...!


நாள் பார்த்து நிலையம் பார்த்து
கட்டி வைத்த வீடெல்லாம்
யார் பார்க்கவும் முடியாமல்
குண்டு போட்டு சிதைச்சாச்சு
சிதையாத உறுதியுடன்
எமக்கான எதிர்காலம் உருவாக்க ....
இது கண்ணுறங்கும் காலமல்ல...
விழித்திரு என் வீர மகனே...!


மரத்தடி தான் இப்போ நம்வீடு
மேலே குருவிக்கும் உண்டு ஒரு வீ(கூ)டு
கீழே எறும்புக்கும் உண்டு ஒரு வாழ்வு
நாதி அற்ற தமிழனுக்கு யாரு வந்து உதவிடுவார்..?
நம் விதியை நாம் தான் எழுதிடனும்.....
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீர மகனே...!

கொட்டும் மழை போலே
குண்டுகள் பொழிந்தாலும்
விட்டு ஓடாது (ஈழ)தமிழனுக்கு வீரம்
அடிமை விலங்குடைத்து
பகையை விரட்டும் நாளை எண்ணி...
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீர மகனே....!

பாட்டன் முப்பாட்டன் ஆண்டதிந்த மண்
அதை அன்னியன் அபகரிக்க
விடலாமா சொல்...!
உன் அப்பன்மீட்கப் போய்
மாண்டதும் இந்த தமிழ் மண்ணில்
இதை நீயும் மீட்டிடும் காலம் வரலாம் ....
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீரத் தமிழ் மகனே.....!

ஆரோ... ஆராரோ வந்திங்கு போனார்கள்
யாரு எமக்கான தீர்வொன்றைத் தந்தார்கள்..?
எமை தீர்த்துவிட எதிரிக்கு ஆயுதங்கள் கொடுத்தார்கள்....
இவை எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால்
இது கண்ணுறங்கும் காலமல்ல
விழித்திரு என் வீரத் திருமகனே ....!





1 கருத்துகள்:

SOS said...

Its different and sure will pinch every reading heart.. Tnx for following my blog and for yr nice comments.

Post a Comment