பாவையாக வேண்டும்....



கிள்ளை மொழிபேசும்
கள்ளமில்லா உள்ளமதில்
தொல்லையில்லா நினைவுகள்...!

அன்னையவள் ஊட்டும் உணவும்
மடிசாய்த்துக் கதை சொன்ன கதையும்
இவள் சார்ந்த மொழிதனிலே
கிள்ளையிவள் பாவை கொள்ளும்....!

தூக்கம் வரும்போது துணையாகும்
தாக்கம் ஏதுமின்றித் தானிருக்கும்
நோக்கம் இல்லா நேசம் கொள்ள
பாசத்தோடதைப் பார்த்திடுவாள்..!

பள்ளிப் படிப்புகளும் பாடல்களும்
துள்ளும் விளையாட்டுகளும்
அள்ளிக் கொடுக்கும் அணைப்புகளும்
தோழியென்றே பாவை பெறும்....!

அல்லும் பகலும் அருகிருத்தி
அளவிலா இன்பம் பெருக்கி
கண்ணே மணியே யெனும் கொ(கெ)ஞ்சல்
எம்மில் இருந்தே தான் பெற்றாள்.....!

இருந்தும்.....

அப்பாவையாக மாட்டேனா ???
என எண்ணி ஏங்கிப் போகின்றேன்....!

அற்றைத்திங்கள் ..!


ற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் நீ எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!

கற்றை மொழிகள் எத்திசையும்
உந்தன் குரலில் ஒலிக்கிறதே
ஒற்றைச் சொல்லாய்நீ உச்சரித்த
எந்தன்பெயரும் காற்றில் அலைகிறதே...!

உற்றதெல்லாம் தொலைந்தது போல
மிச்சமுள்ள உயிரும் என்னில்
குற்றுயிராய்க் கிடக்குதிங்கே
சொச்சமுள்ள உன் நினைவினாலே...!

பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...!

வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..!

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க
சூனிய உலகில் உன்னுடன் நானே
மற்றோர் சிரிப்பில் தெரிந்து கொண்டேன்
மன(ம்)நிலை இன்றி ஆனேனென்று..!


அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம் 
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் எனக்கில்லை 
இதயம் எரிந்து வேகுதடி..!