கையற்ற பொம்மை





அனல்கக்கும் கூரைகள் பற்றும்
அடைக்கலம் தேடியே குழிபுக
அமிலமாய் எந்திரப் பறவைகள் 
எச்சமிடும்…..!


உயிர் வாடி வதங்கிட மெலியும்
உடலும் தாங்கித் தன் தாயும் சேயென
உறவினைக் காத்திட ஓடிடும் ஓட்டம்
உலகும் பார்க்கும்..!


நோய் தொற்றும் நீரின்றி நினைவுகெடும்
வான் கிழித்துப் பெய்யும் மழை
ஈயமாய் உடல்கிழித்து உயிர்குடிக்க
பாலின்றிப் பரிதவித்த பிள்ளை 
தாயிறந்த தறியாதே காய்ந்த முலை
சப்பும்..!


வேல்வந்து வினை தீர்க்கும் 
உமை வந்து அமுதூட்டும் எமை
“பார்”வந்து உயிர்மீட்கும் எனப் பார்த்திருக்க
கையற்ற பொம்மை யாயிருக்கும்

உலகில் மனிதம்! :pale:


♥♥♥..யாதுமானாய்.. ♥♥♥




எழுதுகின்ற எழுத்துகளில் எல்லாம்
உன்னை உள்ளடக்க முடியாது
என் எழுதாத எழுத்துகளின்
நுன் உணர்வுகளை நீ யறிவாய்....♥♥♥

உன் முகமறியும் முன்னமே 
அகமறிந்த அறிமுகம் நீ..
உனையறிந்த பின்னால்தான்
நானே எனக்கும் அறிமுக மாகினேன்..♥♥♥

புலருகின்ற என் காலைகளின்
வெளிச்சமாய் உன்முகம் காட்டி
நாம் சென்றிடும் பயணத்தின் 
திசைகளாய் நீ யாவாய்....♥♥♥

என் எண்ணத்தின் சித்திரத்தை
வண்ணமிடும் தூரிகையாய்
கொள்ளை கொண்ட உள்ளமதை
துடிக்கவைக்கும் ஜீவனுமாய் ஆனாய்...♥♥♥

பதினைந்து
 வருடத்திலென் பாதியுமாய்

ஒவ்வொரு தருணத்திலும் தாயுமாய்
சேயுமாய்த் தோழியாய்க் கூடவே
துணையுமாய் யாதுமாய் ஆனாய்....♥♥♥

எழுதுகின்ற எழுத்துக்களில் எல்லாம்
உன்னை உள்ளடக்க முடியாது...♥♥