சிலேடை வெண்பாக்கள்

பயிற்சிக்காக எழுதிய பாக்கள், பக்குவமாகாவிட்டாலும் பழகிடுவோம் எனும் முயற்சியே :)

படகும் கணணியும்.




பலகை பலவும் இணைந்தே இயங்கும்
உலவிட அக்கரை சேர்க்கும் - செலவிட
சொந்தமாய் வேலை வலையில் தருமிது
விந்தை அழகாம் புவிக்கு...! :)


படகு



பலகையிலான துடுப்பை பல கைகளால் வலிக்க படகு இயங்கும் (பலகை களினால் ஆனதும் படகு எனவும் கொள்ளலாம்)
சுற்றித்திரிய அடுத்த கரைக்குச்சேர்ப்பதற்கும் உதவும்... அத்துடன் வலை போன்றவற்றை வாங்கி (செலவிட) மீன்பிடித்தல் போன்ற சுய தொழிலைச் செய்யக் கூடியத்தாக்கும், செயற்கையாய் செய்தாலும் படகு நீர் நிலைகளில் இருக்கும்போதும் பூமிக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்.



கணணி



பல கைகள் கொண்டு (விசைப்பலகை எலியார் :) )போன்றவற்றை இயக்க இயங்கும். இங்கிருந்து கொண்டே பல இடங்கள் பற்றி அறியவும் அம்மக்களோடு பழகவும் உதவியாகும்(இணையமூலம்) அத்துடன் பணம் முதலிட்டு இணையமூலம்(வலையினில்) சொந்தமாக தொழிலும் செய்ய உதவும். பூமியில் அழகான ஒரு சாதனம்..! :cheese: 



********************************************************************************************



குழந்தையும் தீவிரவாதமும்.


தோன்றும் மிவர்தோற்றம் தோற்றிடத் தோன்றுவர்
வேண்டும் மிதுவென்றே வேண்டிடுவார் - ஈன்றும்
மவர்தேவை தீர்க்கா விருந்திடின் போராம்
கவலையிலும் தேடும் வழி..! 


குழந்தை

குழந்தைகளின் பிறப்பு தானாக நிகழ்வதிலை அதனைத் தோற்று விக்கின்றார்கள் பிறந்த குழந்தை விருப்பத்துடன் ஏதாவது பொருளோ...அல்லது உணவோ வேண்டி கேட்கும் ஆனால் அக்குழந்தையினை ஈன்ற அல்லது தோன்றக்காரணமானவர்கள் குழந்தையின் விருப்பினை தீர்க்காது இருந்தால் வேறு வழியின்றி அழுது புரண்டு போராடி தனது விருப்பினை அடைய முனையும்


தீவிரவாதம்


தீவிரவாதமும் தானாக தோன்றுவதில்லை சில இன, மொழி, மதத்தவர்களினால் உருவாக்கப் படுகின்றது . அத்தீவிரவாதமானது ஏதாவது ஒரு தமது கொள்கையை குறிக்கப் பட்ட சமூகத்திடம் கேட்கும் ஆனால் அது கிடைக்காத பட்சத்தில் வேறு வழி இன்றி போராடியே தமது விருப்பினை அடைய முனையும்...!
********************************************************************************
காதலும் ரயிலும்




கட்டிப் பிடித்தோடும் கண்ணின்றிப் போனாலும்
எட்டும் வழியோடும் மென்றாலும் - தட்டித்
தடம்மாறும் போதெல்லாம் தன்னை யிழக்கத்
திடமாகும் காதல் ரயில்..!



ரயில்

ரயிலானது தண்டவாளத்தினை இறுகப் பற்றியபடியே ஓடும். அதனில் திருப்பி இல்லை(ஸ்ரேரிங்) ஆனால் தண்டவாளம் போகும் வழியிலேயே போகும் தடம்புரழும்போது சேதமாகி ஓடாமல் போகும் 



காதல்

காதலர் இருவரும் மிக நெருக்கமாகப் போவர் காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வர் அவர்கள் தமக்கே உரிய வழியில் வாழ்வர் ஆனால் காதலில் தடங்கல் வரும்போது தம்மை இழக்கவும் தயங்கிடார்.


****************************************************************************
நாயும் கடலும்.


அலையும் நெருங்கிடக் காலணைக்கும் எம்மைக்
கொலையும் புரிந்திட வெண்ணும் - கலையாய்
இவையுமே மண்ணரிக்கும் எல்லையும் காக்கும்
அணைத்தால் நனைத்திடும் நீர்..!



நாய்


அலைந்து திரியும், காலைச்சுற்றிச் சுற்றி வரும், கோபம், வருத்தம் வந்தால் கடித்துக் குதறும்(கொலையும் செய்ய நினைக்கும்) சும்மா மண்ணைக் கிண்டியபடி இருக்கும்(மண்ணரிக்கும்) வீட்டினைக் காக்கும் (கள்ளன் வந்தால் குரைப்பது போன்ற) ஆசையாய் அணைத்தால் நாவினால் நக்கி ஈரமாக்கும் :joker: 




கடல்

அலையடிக்கும் கரையில் போய்நிற்கும் போது அலை காலைஉரசிடும், கொந்தளிப்பு சுனாமியின்போதும் எம்மை உள்ளிளுத்து கொன்றுவிடும், இவை மண்ணரிப்பை ஏற்படுத்தும்,சில நாடுகளின் எல்லைகள் கடலால் இருக்கும் (இலங்கை போன்ற) கடலை / அலையை அணைக்கும்போது நனைத்துவிடும்... :flower: 



******************************************************************************************************
கட்டுச்சோறும் கடிகாரமும்.

கட்டும் கைகள்சிறக்கும் காலம் அறிவிக்கும்
ஒட்டியே கூடவரும் மெப்போதும் - வட்டினில்
வார்த்திருக்கும் கல்லும் கலந்திருக்கும் பார்த்திருக்க
ஈர்த்திடும் பண்பாம் இவைக்கு!



கட்டுச் சோறு


கட்டுச்சோறு கட்டித்தருபவரை உண்ணும் போது நினைக்க அவர் பாசம் சோற்றில் தெரிய அவர் கைகள் சிறப்புடையதாக எமக்கிருக்கும் :)
கட்டுச்சோறை பார்க்கும் போது உணவருந்தும் நேரத்தை ஞாபகப் படுத்தும்,
கட்டுச்சோறை போட்டுக்கொண்டு போக அது எம்முடன் கூடவே வரும்.
(வட்டு)கோப்பை, இலை போன்ற பாத்திரத்தில் போட்டு கட்டியிருக்கும், சோற்றில் சிலநேரம் கல்லும் கலந்திருக்கும், பசியில் கட்டுச்சோற்றைப் பார்க்க அதை உண்ணச்சொல்லி எம்மை ஈர்க்கும்,
 



கடிகாரம்


கடிகாரம் கட்டி இருக்கும் கைகள் அழகாக சிறப்பாக இருக்கும் , கடிகாரம் நேரத்தை அறிவிக்கும், கடிகாரம் கட்டிப் போக எம்முடன் கூடவே வரும்.
கடிகாரம் அதற்கென உள்ள கோப்பையில் இணைத்து இருப்பார்கள் , கற்கள் மூலம் அலங்கரித்தும், இருக்கும், பார்க்கும்போது கவர்ச்சியாக இருக்கும். 






3 கருத்துகள்:

தோழி said...

// பயிற்சிக்காக எழுதிய பாக்கள், பக்குவமாகாவிட்டாலும் பழகிடுவோம் எனும் முயற்சியே :)//

இதுதான் தன்னடக்கம் என்பது...
சீரிய முதிர்ச்சி தெரிகிறது பாக்களில்...
முதல் முயற்சி போல் தெரியல... சிறப்பாக இருக்கிறது...

Unknown said...

மிக்க நன்றி தர்ஷி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பயிற்சிக்கு முதலாய் கொண்ட முயற்சியில் படைத்திட்ட ஐந்து சிலேடை வெண்பாக்களும் அருமை...

முயற்சியே நண்பர்கிட்டே இப்படியென்றால்... பயிற்சிக்கு பின் திறமை எப்படி இருக்கும் என்று நினைத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து நான்...

மேலும் பல வெண்பாக்களை உங்களிடமிருந்து எதிர்நோக்கி...

வாழ்த்துகள்

Post a Comment